Friday 25 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 3

பாடல் - 3
ராகம் - ஆரபி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

நீர் பரந்த நிமிர் புன் சடை மேலோர் நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம்கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இதுவென்ன
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

1. கங்கை பாயும், நிமிர்ந்த, நீண்ட, மெல்லிய  சடையில், ஒரு வெண்மையான நிலவினை சூடியவர். சிவன் எப்போதும் நிமிர்ந்தே அமர்வார். கம்பீரமான தோற்றம் உடையவர்.

சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், ஒரு உபன்யாசத்தின் போது, திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்களின் சரித்ரத்தை பற்றி பேசினார். அப்போது, அய்யாவாளின் வீட்டுக் கிணற்றில், கார்த்திகை மாத அமாவாசையின் போது, கங்கை வந்த சம்பவத்தை விவரித்தார். கங்கை கிணற்றிலிருந்து தோன்றிய சம்பவத்தை, பல பெரியோர்கள் அய்யாவாளுடன் இருந்து பார்த்தனர். அவர்களுள் ஸ்ரீ சதா சிவ ப்ரம்மேந்த்ராளும் ஒருவர். அவர் துங்க தரங்கே கங்கே ஜய என்று ஒரு கீர்த்தனம் பாடினார். மேலும் பல க்ருதிகள் பாடினார். அதில் ஒன்றில், சிவபெருமானிடம் கேட்பது போல் ஒரு சம்பவம் வரும். "சிவபெருமானே, நீர் எப்போதும் நிமிர்ந்தே காணப்படுவீர். ஸ்ரீதர அய்யாவாளின் பக்திக்கு தலை வணங்கி, கங்கையை அவர் வீடுக்கிணற்றில் விட்டீரோ!" என்று கேட்பது போல் அமைந்திருக்கும்.

2. தன் பக்தனாகிய நாயகியின் சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு விரக தாபத்தினை உண்டு பண்ணும் கள்வர். அதாவது, இறைவன் (தலைவன்)  தன்னிடமிருந்து பிரிந்ததால் (தற்காலிகமாக - இந்த மானுட பிறவி எடுத்ததால், ப்ரம்மதினிடமிருந்து வேறாக பிரிந்து நாம் பிறந்துள்ளோம்), தாபத்தினால், உடல் இளைத்து, அந்த தலைவி (தலைவி - நாம்) அணிந்த சங்கு வளையல்கள் நழுவி கீழே விழுமாம். அதற்கு காரணமான நம் உள்ளம் கவர்ந்த கள்வர் இறைவன்.

3. பல ஊர்கள் நிறைந்த இந்த உலகில், பிரளயத்தின் போது மற்ற ஊர்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது, அழியாமல் இருந்த சீர்காழி, அடுத்த மன்வந்தரத்தில், மீண்டும் அண்டம் தோன்றிய போது, முதலில் தோன்றிய ஊராக கருதப்பட்டது.

4. அப்படிப்பட்ட பேர் பெற்ற பிரமாபுரத்தில் மேவும் பெம்மான், இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment