Wednesday 23 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 1

திருஞானசம்பந்தர் முதலில் பாடிய பிரமப்புரம் என்னும் சீர்காழி ஸ்தல பதிகத்தினை முதலில் காண்போம்.

சீர்காழி என்னும் ஊர், பிரளய காலத்தில், உலகம் நீரில் மிதந்த போது, தோணியப்பர் அருளால், நீரில் மூழ்காமல் இருந்தது. தோணி என்றால், படகு. சம்ஸாரம் என்னும் கடலில் தத்தளிப்போற்கு, படகு போல் இருந்து, கரை சேர்ப்பவர் நம்பெருமான். அதனால் அவர் பெயர் தோணியப்பர் என்றானது. சீர்காழி இறைவனை தொழுதால், பாதுகாப்பாக கரை சேர்வோம் என்று இதிலிருந்து தெரிகிறது.

பிரம்மா, சிவனை வணங்கி பூஜித்த ஸ்தலம் ஆதலால் பிரமப்புரம் என்ற பெயர் பெற்றது சீர்காழி.

சிவபெருமானுக்கு சட்டநாதர், ப்ரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்னும் பெயர்கள் இந்த ஸ்தலத்தில் உண்டு. அம்பாள் திரிபுரசுந்தரி. தேவார பாடல் பெற்ற 276 ஸ்தலங்களில், இந்த ஸ்தலம், சோழ நாடு, காவிரி வடகரை ஸ்தலங்கள் 63-ல், 14-வது ஸ்தலம். இந்த ஸ்தலத்தின் மற்றொரு பெயர் தோணிபுரம்.

இந்த ஊர், 108 வைணவ திவ்யதேசங்களிலும் ஒன்று. காழி சீராம விண்ணகரம் என்ற பெயர் கொண்டது. த்ரிவிக்ரம பெருமாள் அருள் புரியும் அழகிய ஊர்.

அடியார்களின் பழவினைகளை களையும் இப்பதிகம், ராகமாலிகையில் இசை அமைக்கப்பட்டுள்ளது. தாளம் - ஆதி தாளம், திஸ்ரநடை.

பாடல் - 1
ராகம் - நாட்டை
தாளம்: ஆதி, திஸ்ர நடை

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

பொருள்:
பீடுடைய பிரமாபுரம் - பெருமை மிகுந்த பிரமாபுரம் என்னும் ஊரில் இருக்கும், பெம்மான் எப்படிபட்டவர்?
1. தோடு அணிந்த செவிகளை உடையவர்
2. விடை - ரிஷபம், காளை மாடு. ரிஷபத்தில் உலா வருபவர்.
3. தூய, வெண்மையான நிலவினை தன் தலையில் சூடியவர்
4. இடுகாட்டில் இருக்கும் சாம்பலினை தன் உடல் முழுதும் பூசி இருப்பவர். சுடலைப்பொடி - விபூதி.
5. தாமரை இதழ்கள் போல் விரிந்த நான்கு முகம் கொண்ட பிரம்மாவால், நாளும் பணிந்து வணங்கப்பட்டவர். பிரமனுக்கு அருளியவர்.
6. சம்பந்தரின் உள்ளதை கவர்ந்த கள்வர்.

கிராம தேவதைகளில், சுடலைமாடன் சாமி என்று ஒருவரை கூறுவார். அவர் நம் சிவபெருமானே என்று இதிலிருந்து தெரிகிறது.
சுடலை + மாடன் - சுடலை மாடன். அதாவது சுடலைப்பொடி பூசி, மாட்டின் மீது உலா வருபவர். விடையில் உல்லாசா என்று கோபாலக்ருஷ்ண பாரதி, நடன சபேசா (கானடா ராகம்) என்ற தனது கீர்த்தனையில் பாடியுள்ளார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. மிக்க அருமை நன்றி ஐயா

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்.மிக்க நன்றி.என் பிள்ளைகள் பொருளுணர்ந்து இப்பாடல்களை கற்க உங்கள் பதிவு மிகவும் உதவியாக இருந்தது.

    ReplyDelete